என்றுமே தமிழ் விரோதி!
ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே இந்தியை திணிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அதற்கான முன்னெடுப்புகளை வேகமாக எடுத்து வருகிறது.
மேலும் ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

தற்போது மும்மொழி கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க பார்க்கிறது. மேலும் மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் கல்விக்கான நிதியை தரமுடியாது என மாநிலங்களை மிரட்டி வருகிறது.
மும்மொழி கொள்கை மூலம் இந்தி திணிப்பை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணிச்சலுடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை தற்போது இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது.
இந்த இந்தி திணிப்பிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது என விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொட்ங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது.
பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும்." என தெரிவித்துள்ளார்.
மோசமான நிலையில்
மத சிறுபான்மையினர்.
இந்தியாவில் சிறுபான்மையினரை நடத்தும் விதம் மோசமடைந்து வருவதாகவும், சீக்கிய பிரிவினைவாதிகளை படுகொலை செய்வதற்கான சதித்திட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியாவின் உளவு அமைப்பின் மீது தடை விதிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“2024 ஆம் ஆண்டிலிருந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாகுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது” என அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தில் பாஜக ஈடுபட்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, “நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது.
இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா?
இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது.
இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது” எனப் பேசியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதனை குறிப்பிட்டு அந்த ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஆணையத்தின் இந்த அறிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. இது ஒரு சார்புடைய மற்றும் அரசியல் நோக்கம் உடைய அறிக்கை என இந்தியா தெரிவித்துள்ளது.
“தனிப்பட்ட சம்பவங்களைத் தவறாக சித்தரித்து, இந்தியாவின் துடிப்பான பன்முக கலாச்சார சமூகத்தின் மீது அவநம்பிக்கைகளை ஏற்படுத்த USCIRF தொடர்ந்து முயற்சிப்பது, மத சுதந்திரத்திற்கான உண்மையான அக்கறையை விட திட்டமிட்ட உள்நோக்கத்தை பிரதிபலிக்கிறது” என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மையின் கலங்கரை விளக்கமாக இருக்கும் இந்தியாவின் நிலையை குறைகூறும் இத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது. உண்மையில் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப். அமைப்புதான் சர்ச்சைக்குரிய அமைப்பாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.