அலைவரிசை ஊழலின் முறைகேடுகள்,,,

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடப்போவதாக முன்னாள் அமைச்சர் ராசா தெரிவித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம்அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடுவேன்: ஆ.ராசா

  தற்போது தனது மெளனத்தை கலைத்து விபரங்களை வெளியிடப்போவதாக கூறியிருப்பதால் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர்.
 இதுவரையில்லா பெரிய ஊழல்ஸ்பெக்ட்ரம் ஊழலாகும். காரணம் இந்த முறைகேட்டால் இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு கொஞ்சம் நஞ்சமல்ல ரூ.1 76 லட்சம் கோடி. சமீபத்தில் பத்திரிகைகளில் கசிந்த பி.ஏ.சி. அறிக்கை மூலம் இந்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1.90 லட்சம் கோடி என்று தெரியவந்துள்ளது. இந்த இழப்பு பற்றி முதலில் மறுத்து வந்த ராசா, தணிக்கைத்துறை அதிகாரி வினோத் ராய் அறிக்கை வெளியிட்ட பிறகு ஒரு வழியாக அதை ஒப்புக்கொண்டார்.
பின்னர் அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. எதிர்க்கட்சிகளின் கடுமையான வற்புறுத்தலை அடுத்த ஆ.ராசா கைது செய்யப்பட்டு அவரிடம் 14 நாட்கள் விசாரணை நடந்தது. பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு அடிக்கடி காவல் நீடிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சித்தார்த் பெஹூரா, ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் பால்வா ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பிறகு 5 தனியார் நிறுவன அதிகாரிகளும் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்கள்.
இதைத்தொடர்ந்து இந்த நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனிடையே ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது. அதாவது கலைஞர் தொலைக்காட்சிக்கு சினியுக் நிறுவனம் மூலம் ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் அம்பலமானது. ஆனால் இந்த தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டதாக தொலைக்காட்சி நிர்வாகம் கூறியது. இந்த தொலைக்காட்சியில் தான் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், கருணாநிதி மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன.
கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் வெளியானதை அடுத்து தயாளு அம்மாளிடமும் கனிமொழியிடமும் சி.பி.ஐ. அதிரடி விசாரணை நடத்தியது. இந்நிலையில் சில தினங்களுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளார். கனிமொழி ஒரு கூட்டுச்சதியாளர் என்று சி.பி.ஐ. அதில் குற்றம் சாட்டியுள்ளது.
கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒவ்வொரு விடயமாக அம்பலமாகி வரும் நிலையில் சிறையில் இருக்கும் ராசா நீதிமன்றத்திற்க்கு அழைத்துவரப்பட்டார். அப்போது என்டிடிவிக்கு தனது மெளனத்தை கலைத்து சில கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதுவரை வாய் திறக்காமல் மெளனம் சாதித்த ராசா தற்போது முதல் முறையாக தனது மெளனத்தை கலைத்துள்ளார்.
உங்கள் மீதான குற்றப்பத்திரிகை பற்றி என்ன கருத்து சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடுவேன் என்று ஒரே வரியில் பதில் அளித்தார் ராசா. இந்த ஊழல் விவகாரத்தில் தி.மு.க. எப்படி கையாண்டது என்று கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் ராசா. கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கலானதும் ஆத்திரம் அடைந்த தி.மு.க. மேலிடம் அவசரமாக கூடியது. அப்போது தன் மகள் கனிமொழி பற்றி வானலாவ புகழ்ந்து பேசினாராம் கருணாநிதி.  ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கலான போது தி.மு.க ஒரு கருத்தையும்வெளியிடவில்லை. இந் நிலையில் இந்த ஊழல் தொடர்பாக அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடப்போவதாக ராசா  கூறியிருப்பது தி.மு.க.விற்கும் ,மேலும் சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை வெளி வராத விபரங்களை வெளியிடுவார் என்று தெரிகிறது.  சிறைச்சாலையில் இருக்கும் ராசா, அங்கு சட்டப்புத்தகங்களை படித்து பொழுதை போக்குகிறார்.
=============================================================================

ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்த அரசுமுயற்சிக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் முதலில் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தை சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பியது. இப்போது பொதுக்கணக்குழு நடவடிக்கைகளையும் சீரழிக்கப் பார்க்கிறது. ஊழல்வாதிகளை காப்பாற்றவும், அவர்கள் பெயர் வெளிவராமல் தடுக்கவும் மத்திய அரசு முற்பட்டுள்ளது என்று முரளிமனோகர் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார்.
 அவர்  கூறியதாவது,” மத்திய அரசு செய்யும் செலவு கணக்குகளை ஆராய பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழுவுக்கு கடமை உள்ளது. தான் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை எந்தவொரு அரசுக்கும் உள்ளது. ஆனால் இப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசோ இதிலிருந்து தவறுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதில் ரூ.1.76 லட்சம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே அந்த அறிக்கை மீது அரசு சந்தேகத்தை கிளப்பியது. இப்போது பார்லிமென்டின் பொதுக் கணக்கு குழுவும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரித்து அறிக்கை அளித்தவுடன் இந்த குழு மீதும் குற்றம் சாட்டி குழுவையே சீரழிக்கப் பார்க்கின்றனர்.
அரசாங்கத்தின் வரவு செலவு கணக்கை தெரிந்து கொள்வதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது என்பதை மறந்து விட்டனர். பொதுக்கணக்கு குழுவின் நடவடிக்கைகளை சீர்குலைக்க நடக்கும் முயற்சிகள் வருத்தம் அளிக்கின்றன. தலைவர் பதவியில் இருக்கும் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர். அனைத்துமே பொய்யானவை. அரசாங்கத்தின் முக்கிய உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை, விசாரணைக்கு அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதை தடுப்பதற்கு பொதுக்கணக்கு குழுவில் உள்ள உறுப்பினர்கள் சிலர் முயற்சி செய்தனர்.
பார்லிமென்ட் செயலகம் தான் இந்த அறிக்கையை இறுதியாக தயாரிக்கும். ஆனால் அறிக்கையை வெளியாட்கள் தயாரித்து அளித்ததாக அபாண்டமாக சொல்கின்றனர். உயர் அதிகாரிகளை அழைத்தது தான் பிரச்சினைக்கு காரணமே. இதன் மூலம் சில உண்மைகள் வெளியாகும் என்ற அச்சத்தில், ஊழல்வாதிகளை மறைப்பதற்கும், சிலரை காப்பாற்றுவதற்கும் அரசு முயற்சிக்கிறது. இது மிகவும் ஆபத்தான முன்னுதாரணம்.
பொதுக் கணக்கு குழு என்பது அரசியல் ரீதியாக செயல்படவே முடியாது. இங்கு அரசியலுக்கு வேலையே கிடையாது. விதிமுறைகளை ஒட்டியே இந்த குழு செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட விடாமல் அனுமதி மறுக்கின்றனர். பொது கணக்குக் குழு அறிக்கையை ஊடகங்களிடம் கசியவிட்டது யார், என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் இந்த அறிக்கை எப்படி வெளியானது என்பது குறித்து கண்டுபிடித்து நாட்டுக்கு சொல்ல வேண்டும். ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் போது, அதை அரசியலாக்கி பார்க்கக் கூடாது. இது போன்ற நாட்டு நலன் சார்ந்த பிரச்னைகளில் அரசியல் வேறுபாடுகளை களைந்துவிட்டு ஒற்றுமையுடன் போராட வேண்டும்.
அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள எந்த அமைச்சரையுமே சம்மன் செய்து விசாரணைக்கு அழைக்கவில்லை. சில அமைச்சகத்தின் செயலர்கள், உயர் அதிகாரிகள் என அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களே அறிக்கை தயாரிக்க போதுமானதாக இருந்தது. இதுதவிர ராஜாவை அழைத்து விசாரணை நடத்த வேண்டுமென்று சில உறுப்பினர்கள் கூறினர். நீதிமன்ற விசாரணைக்குள் இருப்பவர் ராஜா. அவர் மீது தான் தீவிரமாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து சிறையில் உள்ளார். இந்த அறிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொள்ள வேண்டும். பார்லிமென்டில் முறைப்படி தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த அறிக்கை குறித்து பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பன்சால் கூறிய கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை. பொதுக் கணக்குக் குழு கூட்ட நடவடிக்கைகளில் மத்திய அமைச்சர்களும் கூட தங்களது மூக்கை நுழைக்க முற்பட்டது ஏற்கத்தக்கது அல்ல. அறிக்கை ஏற்கப்படவில்லை எனில் நாட்டு மக்களிடம் எதிர்க்கட்சிகள் சென்று முறையிடுவது தான் ஒரே வழி. ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை நாடு முழுவதும் மேற்கொள்ளும்”                                                                                                                                                                                                       - என்று ஜோஷி கூறியுள்ளார்.
  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?