அரியவகை ஏழைகள்10%

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்காவிட்டால் தமிழ்நாடு இல்லாமல் போகும், சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்கும் கடமை எதிர்க்கட்டிகளுக்கு உள்ளது என்று திருவாரூரில் நடைபெற்ற கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை காலை ஐந்து மணிக்கு ஆரம்பம்.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டில்18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

ஒரே நேரத்தில் 470 விமானங்களை கொள்முதல் செய்ய ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இண்டிகோ நிறுவனம்500 விமானங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் செய்துள்ளது.

--------------------------------------------------

கலைஞர் கோட்டம்

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சகோதரி செல்வியுடன் சேர்ந்து இன்று திறந்துவைத்தார்.

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 7 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் ரூ.12 கோடி செலவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. 

இந்த கோட்டத்தில் இரண்டு திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவ சிலை, பழைய புகைப்படங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் ஆழித்தேர் வடிவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கலைஞர் கோட்டத்தை தனது சகோதரி செல்வியுடன் இணைந்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

 இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தை பார்வையிட்டார்.

 பின்னர் பீகார் துணை முதலவர் தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நினைவு நூலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் திமுக எம்.பி-க்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

மேலும், கருணாநிதி பயன்படுத்திய பொருட்களும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த நிகழ்வில் செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாடலும் இசைக்கப்பட்டது.

முன்னதாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக அவரால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.

விழாவையொட்டி, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன், தஞ்சாவூர் சரக டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவே திருவாரூர் வந்து, சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்தார்.

  இன்று காலையில் முதல்வர் ஸ்டாலின் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் ஆகிய கலை நிகழ்ச்சிகளிலும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டுமின்றி நிகழ்ச்சிகளையும் முழுமையாக இருந்து கண்டு மகிழ்ந்தார்.

----------------------------------------

10%அரிய வகை ஏழை

 ஒதுக்கீடு.

பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2019 ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தை தமிழகத்தில்   அமல்படுத்த உத்தரவிடக் கோரி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள ராஜகோபால சுவாமி  குலசேகர ஆழ்வார் கோவில் அர்ச்சகர் பெரிய நம்பி  நரசிம்ம கோபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என,  உயர்கல்வித்துறையும், கல்லூரி கல்வி இயக்குனரகமும், தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களும், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கை  விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த அரசியல்சாசன திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் முடிவெடுக்கப்பட்ட பிறகு இந்த வழக்கை விசாரிப்பதாக கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் செல்லும் என கடந்த 2022ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும், அதை எதிர்த்த மறு ஆய்வு மனுக்களை கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் சுட்டிக்காட்டி, இந்த இட ஒதுக்கீட்டை உயர் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தக் கோரிய தங்கள் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து இந்த வழக்கை ஜூலை 10ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

-----------------------------------

கடவுள் லீலை?

கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு துறவறம் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கும் சாமியார்கள் பாலியல் வழக்கு சிக்கிக் கொள்வது இங்கு அதிகரித்து வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் சுவாமி பூர்ண நந்தா என்பவர், ஞானானந்த ஆசிரமம் நடத்தி வருகிறார். 

அந்த ஆசிரமத்தில் முதியோர் இல்லம் மற்றும் அனாதை இல்லம் உள்ளிட்டவற்றையும் இயக்கி வருகிறார்.

அந்த அனாதை இல்லத்தில் நான்கு சிறுமிகள் உட்பட 12 பேர் தங்கி உள்ளனர். ஆசிரமத்தில் வசிக்கக்கூடிய 15 வயதான சிறுமி ஒருவர், விஜயவாடாவில் சாமியார் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், சுவாமி பூரணானந்தா என்னைச் சித்திரவதை செய்கிறார். மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ளார்.

சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ், பூர்ணானந்தா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 பின்னர் அவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

--------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?