.கலைஞர் கொடுத்த விலை

பிருகச் சரணம்

 ராஜ ராஜ சோழன் காலத்திலே காஷ்மீரிலிருந்து பார்ப்பனர்கள் அதிகமாக வந்தார்கள் அவர்கள் பெரும்பாலானோர் பிருகச்சரண‌ம் என்று சொல்லக் கூடிய பிரிவாக இருந்தார்கள், 

பிருகச்சரணம் என்றால் பெரிய அளவில் இடம் பெயர்ந்தவர்கள் என்று அர்த்தம் நான்கு வேதம் படித்தவர்களை “சதுர்வேதி” என்று அழைத்தார்கள்.,

மூன்று வேதம் படித்தவர்கள் “திரிவேதி”என்று அழைக்கப்பட்டார்கள்.

 சோழர்கள் காலத்திலே வேதக் கல்வியை அரசாங்கம் ஊக்குவித்தது. வேதமுறைகளைக் கற்றுத் தருவதற்கு அரசாங்கம் ஏராளமான மானியம் கொடுத்தது. ஏனென்றால் கோவில் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பார்ப்பனியம் தன்னை ஆழமாக நிலைநிறுத்திக் கொண்டது.,

சோழர் காலத்துக் கல்வெட்டுகளில் கம்மாணச் சுடுகாடு, பறச் சுடுகாடு என்று சுடுகாட்டில் கூடச் சாதி வேறுபாடு இருந்தது. அதற்குச் சான்று கல்வெட்டுகளில் இருக்கிறது.,

கோவில் கலாச்சாரம் என்று உருவாகும்போது அதில் சாதி வேறுபாடு வருகிறது கோவிலுக்குள்ளே குறிப்பிட்ட சாதியினரே அனுமதிக்கப்படுகிறார்கள்.,

சாதியின் பல்வேறு பண்புகளில் ஒன்றாக தீண்டாமை உள்ளது கோவிலுக்குள்ளேயும், வீட்டுகளுக்குள்ளேயும் புறவெளியிலும் மக்களில் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

                                           - தொ.பரமசிவன்.

-------------------------------------------------------------

தடத்தை மாற்றிய 

எமன் யார்?

ஜூன் 2, வெள்ளியன்று ரயில் எண் 12841 ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுராவுக்கு அருகிலுள்ள ஷாலிமார் ரயில் நிலையத்திலிருந்து சரியான நேரத்தில் புறப்பட்டது.

23 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் பாலசோர், கட்டக், புவனேஷ்வர், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா வழியாக சென்னையை அடைய இருந்தது.

இந்த ரயில் மாலை 3.20 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கியது. 

முதலில் சாந்த்ராகாச்சி ரயில் நிலையத்தில் அது நின்றது. பின்னர் 3 நிமிட தாமதத்துடன் கரக்பூர் ரயில் நிலையத்தை அடைந்தது.

கரக்பூர் நிலையத்தில் இருந்து மாலை 5.05 மணிக்கு ரயில் தனது ஓடத் தொடங்கியது. இந்த ரயில் இரவு 7 மணியளவில் பாலசோர் அருகே உள்ள பஹானகா பஜார் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இந்த ரயில் பஹானாகா ஸ்டேஷனில் நிற்காமல் நேராக முன்னோக்கிச் செல்லவேண்டும். 

ஆனால் இந்த ரயில் ஸ்டேஷனில் உள்ள மெயின் லைனுக்குப் பதிலாக லூப் லைன் நோக்கிச் சென்றது. சரக்கு ரயில் ஒன்று லூப் லைனில் நின்று கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலின் மீது பின்னால் இருந்து மோதியது.

சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் மெயின் லைனை விட்டு லூப் லைனில் சென்றது. 

இதன் காரணமாக விபத்து நடந்தது என்று அகில இந்திய ரயில்வே ஆண்கள் சம்மேளன பொதுச்செயலர் ஷிவ் கோபால் மிஷ்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலின்மீது மோதியதால் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. 

அதன் சில பெட்டிகள் கீழே விழுந்து மறுபுறத்தில் உள்ள டவுன்லைனை அடைந்தன. அந்தப் பெட்டிகள் அந்த லைனில் வந்துகொண்டிருந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதியது.

அதேநேரத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த 12864 யஷ்வந்த்பூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் விபத்து நடந்த இடத்தைக் கடந்துகொண்டிருந்தது. 

22 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் சுமார் 4 மணி நேரம் தாமதமாக ஓடிக்கொண்டிருந்தது. ரயிலின் பெரும்பாலான பெட்டிகள், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளாகும் போது அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டிருந்தன.

அப்போதுதான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. 

அதன் சில பெட்டிகள் கீழே விழுந்து உருண்டு யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸின் பின்புறத்தில் மோதியது. இதன் காரணமாக இரண்டாவது ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.

வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், இந்த விபத்தில் இரண்டு ரயில்களின் மொத்தம் 15 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் தெரிகிறது.

மிகப்பெரிய மனிதத் தவறு காரணமாக இந்த விபத்து நடந்திருப்பதாக, கிடைக்கப் பெறும் தகவல்மூலம் உறுதியாகிறது.

தேவையே இல்லாமல் சரியான தடத்தில் சுன்று கொண்டிருந்த ரெயிலை லூப் லைன் மூலம் ஏற்கனவே சரக்கு ரெயில் வழியில் மாற்றியது ஏன்?மாற்றியவர்  யார்? எதற்கு? என்பதுதான் மிக முக்கிய கேள்வி?

முந்நூறு உயிர்களைக் கோரமாக கொன்று சிதறடித்தது தடத்தை மாற்றிய அந்த எமன்தான்.!

---------------------------------------------------------------

ஈழத்தமிழர்களுக்காக கலைஞர் கொடுத்த விலை சாமானியமானதல்ல’

புலிகளின் இறுதிநாட்களில் கலைஞர் செய்தது போதாது இன்னும் செய்திருக்கலாம் என்று பேசுபவர்கள் அக காரணிகளையும் புற காரணிகளையும் விட்டுவிட்டு எடுத்த எடுப்பிலேயே தீர்ப்பு கூறவருவது மிகவும் அபத்தமானது ஆபத்தானது நேர்மையற்றது.- ரவூப் ஹக்கீம், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலங்கை தலைநகரில் உள்ள கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.

இலங்கை இந்திய தொடர்பாளர் மணவை அசோகன் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண சபையின் கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழ் முற்போக்கு முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் பி.பி.தேவராஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பேசுகையில், கலைஞர் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு கொடுத்த விலை சாமானியமானதல்ல, 

இரண்டு முறை ஆட்சிக்கலைப்பும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறந்து காங்கிரஸிடம் தோல்வி, அதனால் ஏற்பட்ட விமர்சனங்கள், இப்படியெல்லாம் விழுப்புண்களை தாங்கிய ஒரு தமிழர்களின் தனிப்பெரும் தானைத்தலைவரை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

அவர் தாங்கிய விழுப்புண்கள் சாமானியமானவை அல்ல; அவற்றுக்கு அவர் கொடுத்த அரசியல் விலை மிகப்பெரியது.

அவர் தாங்கிய விழுப்புண்கள் சாமானியமானவை அல்ல; 

அவற்றுக்கு அவர் கொடுத்த அரசியல் விலை மிகப்பெரியது.

இதை அறியாமல் தெரியாமல் காழ்ப்புணர்ச்சியால் ஒருபுறத்தில் ஓரவன்மம் மறுபுறத்தில் ஆற்றாமையால் விமர்சிக்கிறார்கள்.

புலிகளின் இறுதிநாட்களில் கலைஞர் செய்தது போதாது இன்னும் செய்திருக்கலாம் என்று பேசுபவர்கள் அக காரணிகளையும் புற காரணிகளையும் விட்டுவிட்டு எடுத்த எடுப்பிலேயே தீர்ப்பு கூறவருவது மிகவும் அபத்தமானது ஆபத்தானது நேர்மையற்றது.

இதனை சொல்வதற்காக தீவிர புலி ஆதரவாளர்கள் என்னையும் நிறைய சாடி தள்ளிவிடுவார்கள். விடுதலைப்புலிகளோடு அரசு முதலில் பேச்சுவார்த்தை ஆரம்பித்தபோது நானும் அரச தரப்பில் பேச்சுவார்த்தை குழுவில் இருந்தவன்.

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களோடு மனம்விட்டு நேருக்கு நேர் பலமணி நேரங்கள் பேசியவன். நார்வே ஒப்பந்தம், தமிழ்-முஸ்லீம் உறவு பற்றி எல்லாம் மிக மனம் விட்டு பேசினோம்.

ஈழத்தமிழர் விவகாரத்தில் கலைஞர் மீது இருந்த கலங்கம் களையப்படவேண்டும். திரைமறைவில் நடந்த விஷயங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

அத்வானி, வாஜ்பாய், நவீன் பட்நாய்க் உள்ளிட்ட மிகப்பெரும் இந்திய தலைவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து ஈழத்தமிழர்கள் போராட்டத்திற்கான மிகப்பெரிய போராட்டத்தை கலைஞர் நடத்தினார். 

இதையெல்லாம் மறந்துவிட்டு ஏதோ இறுதிக்கட்டத்தில் நடந்த விவகாரங்கள் அதன் அக காரணிகள், புற காரணிகள் குறித்து பார்க்காமல், பேசும் பேச்சினால் தமிழே மூச்சாக இருக்க வேண்டும் என்று இருந்த கலைஞருக்கு கலங்கம் விளைவிக்கும் இந்த விவகாரம் கவலைக்குரியது.

கலைஞரின் பகுத்தறிவு என்பது வெறும் நாத்திகம் அல்ல; மடமையை உடைப்பது. ஆனால் வெறும் நாத்திகனாக கலைஞரையும் அண்ணாவையும் பெரியாரையும் பேசுவது எந்த பயனும் இல்லை.

நண்பர் மணவை அசோகன் இந்த எளிமையான நிகழ்வை அழகாக நேர்த்தியாக செய்துள்ளார்.

 ஆனால் கலைஞரின் பிறந்த நூற்றாண்டு என்பது இப்படி அல்ல, மிக விமர்சையாக ஈழத்தமிழர்கள் கொண்டாட வேண்டிய விவகாரம்.

கலைஞரின் இயல், இசை, நாடகம் இவை அனைத்தையும் வெளிக்கொணரும் வகையில் கலைஞரின் நூற்றாண்டு நிகழ்வு இங்கு நடக்கும் என்றார்.

--------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?