அமுலாக்கத்துறை

 ஒரு விளக்கம்!

புலனாய்வு அமைப்பு, கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என எதிர்க்கட்சிகளால் சிபிஐ அழைக்கப்படுகிறது. அந்த வகையில், மோடியின் புதிய சிபிஐ என்று அமலாக்கத்துறை அழைக்கப்படுகிறது.

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ என்பது இந்தியாவின் உள்நாட்டு குற்ற விசாரணை நிறுவனமாகும். பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் கீழ் சிபிஐ செயல்பட்டு வருகிறது.

 முதலில் லஞ்சம் மற்றும் அரசாங்க ஊழலை விசாரிப்பதற்காக சிபிஐ விசாரணை அமைப்பு அமைக்கப்பட்டது. 

1965ஆம் ஆண்டு முதல் இந்திய அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட மத்திய சட்டங்களின் மீறல்கள், பல மாநிலங்களில் திட்டமிட்டு நடத்தப்படும் குற்ற சம்பவங்கள், சர்வதேச வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்கும் அமைப்பாக விரிவுபடுத்தப்பட்டது. 

சர்வதேச நிறுவனமான இண்டர்போல் உடனும் இணைந்து செயல்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளில் இருந்து சிபிஐக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமலாக்க இயக்குனரகம் என்பது உள்நாட்டு சட்ட அமலாக்க நிறுவனம் மற்றும் பொருளாதார உளவுத்துறை நிறுவனமாகும். மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. 

பணமோசடி, அந்நியச் செலாவணி மீறல்கள் மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்கிறது. 

கறுப்புப் பண ஒழிப்பு மற்றும் புழக்கத்தைத் தடுப்பதும், அந்நியச் செலாவணி மற்றும் பணமோசடியைத் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

சிபிஐ போலல்லாமல், இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுத்த முடியாத பல்துறை அமைப்பாக அமலாக்கத்துறை உள்ளது. பல்வேறு சட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 அதற்கான அதிகாரங்களை வழங்குகிறது. 

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 இன் கீழ், பரிவர்த்தனை கட்டுப்பாட்டு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் குறித்து விசாரிக்கும் அமைப்பாக நீதித்துறைக்கும் இருக்கும் சில அதிகாரங்களை பெற்றுள்ளது. அத்துடன் குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரத்தையும் அமலாக்கத்துறை பெற்றுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டதன் மூலம், நாட்டின் வலுவான சட்டங்களில் ஒன்றாக பணமோசடி தடுப்புச் சட்டம் மாறியுள்ளது.

 தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை 2018 ஆம் ஆண்டில் இயற்றியதன் மூலம் அமலாக்கத்துறையின் அதிகாரங்களை இன்னும் சக்திவாய்ந்ததாக ஒன்றிய அரசு மாற்றியது.

சிபிஐ போலல்லாமல், ஒரு வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு மத்திய அல்லது எந்த மாநிலத்தின் பரிந்துரையோ அல்லது நீதிமன்றத்தின் வழிகாட்டுதலோ அமலாக்கத்துறைக்கு தேவையில்லை.

 எப்ஐஆர் இருந்தால் எந்த வழக்கையும் விசாரிக்கலாம். ஆனால், இந்த நிறுவனம் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ளது, உள்துறை அமைச்சகத்தின் கீழ் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாநிலங்களவையில் பணமோசடி தடுப்பு (திருத்தம்) மசோதா, 2012யை அறிமுகப்படுத்தி பேசிய அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “முதலாவதாக, பணமோசடி என்பது தொழில்நுட்ப ரீதியாக வரையறுக்கப்பட்ட குற்றம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ‘பணமோசடி’ என்பது பேச்சு வார்த்தையில் நாம் புரிந்து கொள்ளும் விதம் அல்ல. 

இது தொழில்நுட்ப ரீதியாக வரையறுக்கப்பட்ட குற்றமாகும்.” என்றார். 

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை மற்றும் அதே சட்டத்தின் கீழ் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?